கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்த்தது அமித் ஷாதான்: வைரலாகும் எடியூரப்பாவின் வீடியோ!
பணம் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி எடியூரப்பாவும், அமித் ஷாவும் கர்நாடகாவில் செய்த ஜனநாயகப் படுகொலை அம்பலமாகியுள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் மத சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமித் ஷா தலைமையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா வெளிப்படையாகக் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதியன்று கர்நாடகாவில் நடக்கவிருக்கும் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த பாஜக ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 26ஆம் தேதியன்று ஹூப்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சில தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வும் நடை பெற்றிருக்கிறது.
குமாரசாமி தலைமையிலான ஆட்சியில், அங்கம் வகித்த13 காங்கிரஸ் மற்றும் 2 மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம் எல் ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் மசாஜ- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. பின்பு எடியூரப்பா முதலைமைச்சராக பொறுப்பேற்று பாஜக ஆட்சியமைந்தது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கான இந்த இடைத் தேர்தலில், மீண்டும் அதே எம்.எல்.ஏக்களை பாஜக சார்பில் நிறுத்துவதற்கு அம்மாநில பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாக அறியப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பதவி விலகிய காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏக்களுக்கு பாஜகவினர் ஆதரவு கொடுக்க மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் இந்த வீடியோவில் கட்சியினரிடையே எடியூரப்பா பேசியதாவது: உங்களுடைய பேச்சுகளில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நீடிக்க வேண்டும் என்கிற விருப்பம் துளியும் தெரியவில்லை. வருகின்ற இடைத் தேர்தலில் நாம் வெற்றி பெறுகிறோமா, தோல்வி அடைகிறோமா என்பது வேறு பிரச்சனை. ஆனால் தங்களுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம் என்று ஒருவர் கூட சொல்லவில்லை. இந்த 15 முன்னாள் எம்.எல்.ஏக்களின் முடிவு குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். இவர்களை மும்பையில் உள்ள ஹோட்டலில் தங்க வைத்தது என்னுடைய முடிவு மட்டுமல்ல, அது கட்சியின் தேசிய தலைவரின் (அமித் ஷா) முடிவு. இரண்டரை மாதங்களுக்கும் மேலாக இந்த எம்.எல்.ஏக்களால் தங்களுடைய தொகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. அவர்களால் தங்களுடைய குடும்பங்களைக் கூட சென்று சந்திக்க முடியாமல் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எதிர்கட்சியில் இருந்த நாம் இப்பொழுது கர்நாடகாவின் ஆளும் கட்சி ஆவதற்கு இந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள் என்று எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.
நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில், ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்குப் பதிலாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ராஜு காகே போன்றோரை வேட்பாளராக நிறுத்த கர்நாடகா பாஜக முடிவெடுத்திருக்கிறது. இந்த முடிவை எதிர்த்திருக்கும் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, “காகே போன்றோரை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு நீங்கள் அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி தங்களுடைய பதவியை ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை. இந்த முன்னாள் எம்.எல்.ஏக்களின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? நான் தவறு இழைத்துவிட்டேன்” என்று எடியூரப்பா அந்த வீடியோவில் கூறுவது பதிவாகியிருக்கிறது.
@bsybjp again confesses about operation Kamala & the immoral defection of @INCIndia MLA’s.
— ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್/ Dinesh Gundu Rao (@dineshgrao) November 1, 2019
He also clearly reveals that @AmitShah took care of the defectors for 2.5 months in Mumbai.
What more damning proof required that @BJP4India masterminded this entire operation. pic.twitter.com/Oi1PrbdsSN
இந்த வீடியோ குறித்து எடியூரப்பா தரப்பில் இருந்து இதுவரை எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பணம் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி எடியூரப்பாவும், அமித் ஷாவும் கர்நாடகாவில் செய்த ஜனநாயக படுகொலை அம்பலமாகியுள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.