"என் சாவைக் கண்முன்னால் பார்த்தேன்" - நடிகர் விஷால்
என் சினிமா வாழ்வில் அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிபட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’ தான். ஏனென்றால்ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன்.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்த ‘ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் சாரா
நடிகர் சாரா பேசும்போது, "சுந்தர் அண்ணா எப்படி இயக்குகிறார் என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அவர் படங்களில் பொதுவாக கூட்டமாகவே இருக்கும். ஒரே நேரத்தில் 2, 3 காட்சிகள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும். ஆனால், எதையும் அலட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பார்" என்றார்.
அகன்ஷா பூரி பேசும்போது, "சன் டிவியின் விநாயகர் தொடரில் என்னை பார்வதியாகத்தான் எல்லோருக்கும் தெரியும். இப்படம் மூலம் என்னை எல்லோரும் வெள்ளித் திரையில் காண்பார்கள். டிரைலர் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. படம் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலாக இருக்கிறேன்" என்றார்.
ஹிப்ஹாப் ஆதி பேசும்போது, "இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள். இப்படத்தைப் பொறுத்தவரையில் பாடல்களை விட பின்னணி இசைதான் முக்கிய இடம்பெறும். ஆக்ஷன் படத்தின் புரோமோ பாடலில் இரண்டு கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். எனக்கு எல்லோரும் நல்ல விமர்சனங்களைக் கொடுத்து ஆதரவு கொடுத்து வருவதற்கு நன்றி" என்றார்.
நடிகை தமன்னா பேசும்போது, "ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்து வருகிறீர்கள். இயக்குநர் சுந்தர்.சியுடன் பணியாற்றும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியாது. அவருடன் பணிபுரிய மிகவும் விருப்பமாக இருந்தேன். பாகுபலி படத்தில் சண்டைக் காட்சிகள் நிறைய இருக்குமென்று ஆவலாக இருந்தேன். ஆனால் அந்தக் கனவை ஆக்ஷன் படத்தின் மூலம் சுந்தர்.சி நிறைவேற்றியுள்ளார். மற்ற படங்களைவிட இப்படத்தில் தனித்தன்மையாக நடித்த அனுபவம் புதுமையாக இருந்தது. ஏனென்றால், ஆக்ஷன் கதாபாத்திரமென்பதால் வசனங்கள் கொண்ட பேப்பர் இருக்காது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அந்த இடத்திற்கு செல்லுங்கள். இந்த இடத்தில் நில்லுங்கள் என்று தான் சூழ்நிலை இருக்கும். அனைத்து சண்டைக் காட்சிகளிலும் விஷாலுக்கு பின்னால்தான் நிற்பேன். விஷாலுக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி" என்றார்.
இயக்குநர் சுந்தர்.சி. பேசும்போது, "இப்படம் என்னுடைய கனவுப்படம் என்றும் கூறலாம். முதன்முதலாக நான் எடுத்த படம் கிராமப் பின்னணி கொண்ட படம். அப்படத்தைப் பார்த்த அனைவரும் இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே என்றார்கள். இந்தக் கேள்வியை நான் ஒவ்வொரு படத்திலும் சந்தித்தேன். எது தான் என்னுடைய படம்? என்னுடைய படமென்றால் எந்த பாணியில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்று குழப்பமடைந்தேன். ஆனால், இப்படம் மூலம் எல்லோருக்கும் இது என்னுடைய படமென்ற உணர்வு இருக்கும். சண்டைக் காட்சிகளில் தமன்னா டூப் போடாமல் தைரியமாக பணியாற்றினார். இதுவரை இப்படியொரு கதாநாயகி தமிழ் சினிமாவில் இருந்திருப்பார்களா என்று சந்தேகம்தான். அகன்ஷாவையும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்துதான் தேர்ந்தெடுத்தோம். விஷாலுக்கு பெண் வேடமிட்டால் அகன்ஷா மாதிரிதான் இருப்பார். அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். தமன்னா, அகன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடுதான் போவார்கள். ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்த எல்லா படமும் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழில் அவருக்கு இது முதல் படம். இப்போது கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்., சாயாசிங் சில காட்சிகளில் வந்தாலும் கண்ணியமாக நடித்திருப்பார். லட்சுமிகரமாக இருக்க வேண்டும், அனைவரின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற சவாலான கதாபாத்திரத்தைக் கூறியதும், சிறு புன்னகையுடன் ஒப்புக் கொண்டார். மேலும், இப்படத்தில் எனக்கு பக்க பலமாக அமைந்தது தேசிய விருது பெற்ற அன்பறிவு இருவரும்தான். அடுத்து ஹிப்ஹாப் ஆதி. முதலில் நான் ஆதிக்கு இந்த படத்தைக் கொடுக்க கூடாது என்றிருந்தேன். ஆனால், என்னிடமிருந்து இசையமைப்பாளர் வாய்ப்பைப் பிடுங்கிச் சென்று இசையமைத்தார். நான் நினைத்ததைவிட வேகமாக தன் பணியை முடித்துவிட்டார் ஆதி. மிலிட்டரி, தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்தில் வில்லன் யார் என்பது தான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும். இப்படத்தின் கிராபிக்ஸ் பணி செய்த அனைவருமே சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள்தான். சென்னையில் இந்தளவு உயர்தரமான காட்சிகளைக் கொடுக்க முடியுமா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.
விஷால் இயக்குநரின் நடிகர். ஒருமுறை அவர் ஒப்பந்தம் செய்துவிட்டால் நாம் என்ன சொல்கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய்வார். மேலிருந்து குதிக்க சொன்னேன். உடனே குதித்து விட்டார். விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது. அதற்கு தயாரிப்பாளரும் ஒத்துழைப்புக் கொடுத்தார்" என்றார்.
நடிகர் விஷால் பேசும்போது, "சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம்தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். நாங்கள் மேடையில் அமர்ந்திருப்பதற்கும், இந்த அமைப்பைக் கொண்டு வருவதும் சாதாரணமான செயல் அல்ல. அதை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவிசந்திரன் செய்திருக்கிறார். ‘சங்க மித்ரா’ தான் சுந்தர்.சியின் கனவு திரைப்படம். ஆனால் அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் சினிமா வாழ்வில் அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிபட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’ தான். ஏனென்றால் ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன். ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு ரத்தானது.
அதன்பிறகு ஒரு காட்சியில் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் ரவி இருவரையும் எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாமல் எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள். ஆண்டுக்கொரு சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும். என் குருநாதர் அர்ஜுன் சார் தான். இயக்குநராக நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர்.சியுடன் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும். ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார். 90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம். உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன். ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர்கள் பலர் வரவேண்டும். எனக்கு அடிபட்ட பிறகு அன்புறிவு, சுந்தர்.சி இருவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் இப்படத்திற்கு இருந்த சவாலான விஷயம் படத்தொகுப்பு. அதை ஸ்ரீகாந்த் திறமையாக செய்து முடித்திருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. அகன்ஷாபூரியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது. ஆனால் இப்படத்தில் வரும் காட்சிக்காக அகன்ஷாவை பலமுறை அடித்தேன். அதற்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடிபடாமல் இருப்பதற்காக சிறப்பு உடை கொடுப்பார்கள். ஆனால் அகன்ஷா அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் அடிபட்ட நாளில் கூட படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்து முடித்தார். துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.‘ஆக்ஷன்’ படத்தை பெரிய திரையில் காணுங்கள்" என்றார்.